மங்களூரு:-
சாக்கடைக்குள் இறங்கி அடைப்பை சுத்தம் செய்த பாஜக கவுன்சிலருக்கு பாராட்டுக்கள் குவிந்துள்ளது.
கர்நாடக மாநிலம் மங்களூர் அருகே கத்ரி-கம்பாலா வார்டு கவுன்சிலர் மனோகர் ஷெட்டி. சமீபத்தில் சாக்கடைக்குள் ஊழியர்கள் இறங்க மறுத்த நிலையில், உள்ளே நுழைந்து அடைப்பை சரிசெய்ததைத் தொடர்ந்து ஷெட்டியை மக்கள் பாராட்டி வருகின்றனர். நிரம்பி வழிகின்ற வடிகால் போக்குவரத்து சிக்கல்களையும் பாதசாரிகளுக்கு சிரமத்தையும் ஏற்படுத்தி வந்த நிலையில் அவரின் துன்னிச்சல் அனைவராலும் பாராட்டப்படுகிறது.
வடிகாலை சுத்தம் செய்வதற்காக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு தோல்வியுற்றன. அதைத் தொடர்ந்து கவுன்சிலர் ஷெட்டி தொழிலாளர்களை அழைத்தார், ஆனால் மழைக்காலங்களில் வேகமாக தண்ணீர் நுழையும் அபாயம் உள்ளதால் அவர்கள் நுழைய மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து வடிகால் அடைப்பை சரிசெய்ய அதிவேக வாட்டர் ஜெட் பொருத்தப்பட்ட வாகனத்தை கொண்டு முயற்சித்தும் பலனளிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து யாரும் உள்ளே செல்லத் தயாராக இல்லை என்பதால் ஷெட்டி தானே உள்ளே நுழைந்து குழாய் அடைப்பை சரி செய்தார்.