திருவனந்தபுரம் :
கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் 3 கட்டங்களாக நடக்கிறது.முதல் கட்டமாக இன்று திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டை, ஆலப்புழை மற்றும் இடுக்கி ஆகிய 5 மாவட்டங்களில், 395 உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 6911 வார்டுகளுக்கு தேர்தல் நடக்கிறது. இதற்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. இன்று மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.
இந்த 5 மாவட்டங்களில் மொத்தம் 88 லட்சத்து 26 ஆயிரத்து 620 வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். இதற்காக 11 ஆயிரத்து 225 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. 56 ஆயிரத்து 122 ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்களை வாக்குச்சாவடி அதிகாரிகள் எடுத்து சென்றனர்.
இந்த உள்ளாட்சி தேர்தலில் கொரோனா கட்டுப்பாடு விதிகள் முறையாக பின்பற்றப்படும் என்றும் வாக்காளர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து, தனி மனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் மாநில தேர்தல் கமிஷனர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார். இன்றைய வாக்குப் பதிவை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.மொத்தம் 34,710 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.