சென்னை:-
ஆப்பிள் போன்களை அசம்பிள் செய்யும் ஃபாக்ஸ்கான் நிறுவனம், சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆலையில் 1 பில்லியன் டாலர் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக வர்த்தகப் போர் வலுத்து வருகிறது. இதனால் தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதனால் ஆப்பிள் நிறுவனம் பொருட்களை தயாரிக்க சீனாவை சார்ந்திருப்பதை படிப்படியாக குறைக்க திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் ஆப்பிள் போன்களை உற்பத்தி செய்ய தைவான் நிறுவனமான ஃபாக்ஸ்கான் தனது தொழிற்சாலையை விரிவுபடுத்தும் நோக்கில் சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் ஆலை விரிவாக்க பணிக்காக 1 பில்லியன் டாலர் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
இந்த தொழிற்சாலையில்தான் iPhone XR மாடல் தயாரிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த முதலீட்டின் மூலம் iPhone SE (2020) மாடலும் இந்தியாவில் விரைவில் தயாரிக்கப்படும் என கூறப்படுகிறது. இதன் மூலம் 6,000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத் தவிர, இந்நிறுவனம் பிற ஐபோன்களையும் இந்தியாவிலேயே தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் ஆந்திராவிலும் ஃபாக்ஸ்கான் நிறுவனத்துக்கு இரண்டு தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு ஆப்பிள் ஐபோன்கள் மற்றும் சீனாவின் ஜியோமியும் தயாரிக்கப்படுகின்றன.
இந்த முதலீடு குறித்து ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைவர் லியு யெங்க் வே Liu (Young-way) கூறுகையில்:-
இந்தியா எப்போதும் தொழில் தொடங்குவதற்கு பிரகாசமான இடமாக இருந்துள்ளது. தற்போது கொரோனாவால்தான் சிறு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஆனாலும், அடுத்தகட்ட நடவடிக்கைகளில் முழு வீச்சில் இறங்கியுள்ளோம். இன்னும் சில மாதங்களில் எங்கள் இணையதளத்தில் இதற்கான அறிவிப்பு வெளியாகும். மேலும், சில முதலீடுகளையும் செய்ய உள்ளோம் என்றார்.
இந்த முதலீடு மேக் இன் இந்தியா திட்டத்திற்கு நல்ல வாய்ப்பாக அமையும். இந்தியாவில் அதிக அளவில் ஐபோன்களை உற்பத்தி செய்வதன் மூலம் அதன் விலையை குறைக்க முடியும். சீனாவுடனான மோதல் அந்நாட்டு பொருட்களின் இறக்குமதியை குறைக்கும் நிலைக்கு தள்ளியுள்ளது. இதனால் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது.