போபால்:-
கடைக்காரர் ஒருவரை தாக்கி சிறையில் இருந்த மாணவருக்கு வாட்ஸ்அப் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்த கூடாது என்ற நூதனமான நிபந்தனைகள் விதிக்கப்பட்டு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் பிந்த் மாவட்டத்தைச் சேர்ந்த ஹரேந்திர தியாகி (18) என்பவர் புகையிலை வாங்கும்பொழுது ஏற்பட்ட தகராறில் கடைக்காரர் ஒருவரை தாக்கி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் தான் சமீபத்தில் 12 ஆம் வகுப்பை 75 சதவீத மதிப்பெண்களுடன் முடித்துள்ளதாகவும் விரைவில் நடக்க இருக்கும் வேளாண் கல்லூரியில் சேர நுழைவுத்தேர்வுக்கு (Pre-Agri Test) தயாராகவேண்டும் என்ற கூறி ஜாமீன் வேண்டி குவாலியர் உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்தார்.
இதையடுத்து மனுவை பரிசீலனை செய்த நீதிபதி ஆனந்த் பதக் அவருக்கு சில விசித்திரமான நிபந்தனைகளோடு ஜாமீன் வழங்கினார். அதில் ‘இரண்டு மாதங்களுக்கு பேஸ்புக் மற்றும் வாட்ஸ் ஆப் உள்ளிட்ட எந்த வொரு சமூகவலைதளத்திலும் இருக்கக் கூடாது எனக் கூறியுள்ளார். மேலும் இந்த ஜாமீன் நாட்களை தேர்வுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதால் இந்த நிபந்தனை விதித்ததாகவும் நீதிபதி விளக்கமளித்துள்ளார். நீதிபதியின் விசித்திரமான தீர்ப்பு அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
மேலும் 50 ஆயிரம் ரூபாய்க்கு தனி நபர் ஜாமீன் பிணையாக வைக்கவும் உத்தரவிட்டுள்ளார்.