தூத்துக்குடி:-
சாத்தான்குளம் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சிறப்பு எஸ்.ஐ. பால்துரை (56) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சாத்தான்குளம் வணிகர்கள் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் சிறை மரணம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட சிறப்பு சார்பு உதவி ஆய்வாளர் பால்துரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மதுரை மருத்துவமனையில் உயிரிழந்தார்.
சாத்தான்குளம் தந்தை மகன் மரண வழக்கை கொலை வழக்காக மாற்றி சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன், முதல் நிலை காவலர் முத்துராஜா, சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை, தலைமைக் காவலர் சாமிதுரை, முதல் நிலைக் காவலர்கள் வெயில்முத்து, செல்லதுரை, தாமஸ் பிராங்க்ளின் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே, இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனா ஏற்பட்டது. அதேபோல மற்றும் சிறப்பு எஸ்.ஐ பால் துரை கொரோனா பாதிப்பு காரணமாக சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதி கோரி அவரது மனைவி மங்கயர்திலகம் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்த நிலையில், பால்துரை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக தகவல் வெளியாகியது. சிறைக்கைதி சிகிச்சையின்போது பலியானதால் இன்று நீதிபதி முன்னிலையில் விசாரணை நடத்தப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.