மும்பை:-
மராட்டிய மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் புதிய தளர்வுகள் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
கொரோனா பாதிப்பு சதவீதம், ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பிய சதவீதத்தை வைத்து கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் மாவட்ட, மாநகர பகுதிகள் 5 வகையாக பிரிக்கப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பு சதவீதம் 5-க்கு கீழும், ஆக்சிஜன் படுக்கைகள் 25 சதவீதத்திற்கும் குறைவாக உள்ள பகுதிகள் 1-வது பிரிவில் வருகின்றன. இந்த பகுதிகளில் ஏறக்குறைய முழு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
2, 3, 4-வது பிரிவு பகுதிகளிலும் பல்வேறு தளர்வுகள் செய்யப்பட்டு உள்ளன. இதில் மும்பை 3-வது பிரிவில் வருகிறது. இங்கு பூங்கா, விளையாட்டு மைதானங்கள், உடற்பயிற்சி கூடங்கள், சலூன்கள் உள்ளிட்டவை திறக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.
தொற்று நோய் பாதிப்பு சதவீதம் 20 சதவீதத்திற்கு மேல் உள்ள பகுதிகள் கடைசி பிரிவில் (5-வது பிரிவு) வருகின்றன. இங்கு அத்தியாவசிய கடைகளை திறக்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கிறது.
இதற்கிடையே முதல் நான்கு பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் மாநில அரசு அறிவித்து உள்ள தளர்வுகள் இன்று நடைமுறைக்கு வந்துள்ளது.
இதனையடுத்து மும்பையில் பேருந்து சேவைகள் மீண்டும் தொடங்கி உள்ளது. அதோடு, முதல் 2 கி.மீ தூரத்திற்கு ரூ.10ம், அதற்கடுத்த ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் தலா ரூ.2ம் கட்டணமாக வசூலிக்கப்படும். 18 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்ய ரூ.30ம், 30 கிலோமீட்டர் தூரம் பயணிக்க ரூ.45ம் பயணிகள் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், பேருந்தில் பாதி அளவில் பயணிகளின் எண்ணிக்கை இருக்கும் என்றும், ஒவ்வொரு பயணியும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதேபோல மும்பையில் மின்சார ரயில் சேவையும் இன்று முதல் துவங்கியுள்ளது.