வாஷிங்டன்:
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் நேற்று அரசு முறை பயணமாக தனி விமானம் மூலம் கவுத்தமாலா மற்றும் மெக்சிகோ நாட்டிற்கு நேற்று மதியம் ஆண்ட்ரூஸ் விமானப்படை தளத்தில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டார்.
அவர் சென்ற விமானத்தில் புறப்பட்ட 30 நிமிடங்களில் திடீர் என்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
இதை சரி செய்ய விமானி முயற்சி செய்தார். என்றாலும் அதற்கு பலன் கிடைக்கவில்லை. எனவே கமலா ஹாரிஸ் சென்ற விமானம் மீண்டும் அதே விமான நிலையத்துக்கு திரும்பியது. அங்கேயே தரை இறக்கப்பட்டது.
பின்னர் அவர் வேறு ஒரு விமானத்தில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து வேறு விமானத்தில் தனது பயணத்தை கமலா ஹாரிஸ் தொடர்ந்தார். அதில் அவர், திட்டமிட்டபடி கவுத்தமாலாவுக்கு சென்றடைந்தார்.
கொரோனா தாக்குதல் ஏற்பட்ட பிறகு, கவுத்தமாலா, மெக்சிகோ ஆகிய இடங்களுக்கு சென்று, அங்குள்ள மக்களுக்கு விழிப்புணர்வு, நம்பிக்கை ஆகியவற்றை ஏற்படுத்த திட்டமிட்டு இருந்தார். இங்கு வாழ்வோர் பெரும்பாலும் புலம் பெயர்ந்தவர்கள்.
இங்கு ஆவணம் இல்லாமல் இருப்போருக்கு குடியேறுவற்கு தேவையான மூல காரணங்களை ஆய்வு செய்வதும் இவரது பயணத்தின் மற்றொரு நோக்கமாகும். இது புதிய அமெரிக்க அரசின் முக்கிய திட்டங்களில் ஒன்றாகும்.
அமெரிக்க துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ் பதவி ஏற்ற பிறகு அரசு முறை பயணமாக அவர் செல்லும் முதல் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.