வாரணாசி:-
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நேபாளிக்கு ஒருவருக்கு மொட்டை அடித்து, ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட வைத்து, நேபாள பிரதமருக்கு எதிராக கோஷமிட கட்டாயப்படுத்திய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
இந்தியாவவுடன் நெருங்கிய நட்புறவுநாடாக இருந்து வந்த நேபாளம் கடந்த சில மாதங்களாக எல்லை பிரச்னை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் இந்தியாவுடன் மோதல் போக்கை கையாண்டு வருகிறது.
நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி இந்தியாவின் சில பகுதிகளை தங்கள் நாட்டிற்கு சொந்தம் என்று கூறி நேபாள நாட்டின் புதிய வரைபடத்தை வெளியிட்டு இந்தியாவை சீண்டினார். மேலும், இந்தியா தன்னை பதவி நீக்கம் செய்ய முயற்சித்து வருகிறது என்று வெளிப்படையாகவே குற்றம் சுமத்தினார். இதனால் கட்சிக்குள் சலசலப்பு எழுந்து அவரை ராஜினாமா செய்யும்படி கட்சி உறுப்பினர்களால் நிர்ப்பந்திக்கப்பட்டார் கே.பி.சர்மா ஒலி.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ராமர் அயோத்தியில் பிறக்கவில்லை எனவும் நேபாளத்தில் தான் பிறந்தார் என சர்ச்சையை கிளப்பினார். அவரின் இந்த கருத்துக்கு அவரது சொந்த கட்சிலேயே எதிர்ப்பு கிளம்பியது. அனைத்து தேவைகளுக்கும் இந்தியாவை சார்ந்திருக்கும் போது தேவையின்றி அந்நாட்டை பகைத்து கொள்ள வேண்டாம் என நேபாளத்தின் முன்னாள் பிரதமர் கருத்து கூறி வருகின்றனர். பின்னர் அவரே தனது கருத்தை மாற்றி கூறும் நிலைமைக்கு தள்ளப்பட்டார்.
இதனிடையே, வாரணாசியில் நேபாள நாட்டை சேர்ந்த ஒருவரை கும்பல் ஒன்று மொட்டை அடித்து, உச்சந்தலையில் (Scalp) ஜெய் ஸ்ரீ ராம் என்று எழுதி, அவரை கட்டாயப்படுத்தி ஜெய் ஸ்ரீ ராம் என கோஷிமட செய்தனர். மேலும் நேபாள பிரதமர் கேபி ஒலிக்கு எதிராக கோஷமிட கூறி வலுக்கட்டாயப்படுத்தியது அந்த கும்பல். இதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களிலும் பரவ விட்டுள்ளனர்.
இந்த வீடியோவில் நேபால் நாட்டைச் சேர்ந்தவரை விஸ்வ ஹிந்து சேனா ஜிந்தாபாத், ஹிந்துஸ்தான் ஜிந்தாபாத், நேபாள பிரதமர் முர்தாபாத் (Murdabad) என்று கூற செய்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வாரணாசி காவல் கண்காணிப்பாளர் அமித் பதாக் கூறியதாவது:-
இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் விஸ்வ ஹிந்து சேனா என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள். இந்த அமைப்பின் தலைவன் பெயர் அருண் பதாக் என்றும் கூறினார். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார், மற்றவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது குறித்து கடும்நவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அவர்கள் மீது எப்ஐஆர் பதியப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
இது குறித்து இந்தியாவிற்கான நேபாள தூதர் உ.பி. மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் பேசி உள்ளார். சம்பந்தப்பட்டவர்கள்மீது கடும் நடவடிக்கைஎடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
இது போன்ற விஷயங்களில் ஒரு சிலர் செய்யும் தவறுகள் நாட்டிற்கே தலைகுனிவை ஏற்படுத்திவிடுகிறது. ஏனெனில் நேபாள பிரதமர் ஒலியின் பேச்சுக்கு அந்நாட்டிலேயே எதிர்ப்பு எழுந்துள்ள சூழலில் அந்நாட்டைச் சேர்ந்தவர்களை துன்புறுத்துவது சர்வதேச அரங்கில் நாட்டிற்கு பெரும் அவப்பெயரை ஏற்படுத்திவிடும். அதோடு நேபாள மக்கள் மத்தியில் இந்தியாவின் மீது வெறுப்புணர்வை ஏற்படுத்தும்.