திருவனந்தபுரம்:-
மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கிலிருந்து கேரள மாநிலம் தும்பாவிலுள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்துக்குத் தேவையான ‘ஏரேஸ்பேஸ் ஆட்டோகிளேவ்’ (Aerospace Autoclave) எனும் பிரமாண்ட கருவியை ஏற்றிக் கொண்டு கடந்து 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மாதம் கிளம்பிய டிரக் 10 மாதங்கள் கழித்து திருவனந்தபுரம் அருகே வட்டியூர்காவு (Vattiyoorkavu) வந்தடைந்தது.
திருவனந்தபுரத்தில் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் (Vikram Sarabhai Space Centre (VSSC)) உள்ளது. செயற்கைக்கோள் உந்துசக்தி மேம்படுத்துதல், அது தொடர்பான தொழில்நுட்பங்களை உருவாக்கும் முக்கியமான ஆய்வு மையம் இது. இங்குதான் இந்தியாவின் விண்வெளி ஆய்வு தொடர்பான பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
விக்ரம் சாராபாய் நிறுவனத்துக்காக, அதிக வெப்பம் மற்றும் அதிக அழுத்தத்தைத் தாங்கும் வகையிலான ‘ஏரேஸ்பேஸ் ஆட்டோகிளேவ்’ எனும் கருவியை நாசிக்கில் உள்ள யுனிக் கெமோ (Unique Chemo Plant) நிறுவனத்தில் உருவாக்கப்பட்டது. இந்த 5 மீட்டர் விட்டம் கொண்ட பிரமாண்ட கருவியை நாசிக்கிலிருந்து 1761 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருவனந்தபுரத்துக்கு கொண்டு வரும் பணி கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 21 வயது சுரேஷ் யாதவ் மற்றும் ஏழு பேர் கொண்ட குழுவினர் தொடங்கினர்.
இந்தப் பிரமாண்ட கருவி 70 டன் எடை கொண்டது. 7.5 மீட்டர் நீளமும் 6.65 மீட்டர் அகலமும் கொண்டது. அதிக எடை கொண்ட இந்தக் கருவியை சுமர்ந்து செல்ல 74 டயர்கள் கொண்ட பிரத்யேக டிரக் பயன்படுத்தப்பட்டது. இந்த டிரக் 32 பேரால் இயக்கப்பட்டது. அதிக எடை காரணமாக இந்த டிரக் சாலையில் செல்லும் போது மற்ற வாகனங்கள் செல்வது தடை விதிக்கப்பட்டது. இதனால், நாள் ஒன்றுக்கு 5 கிலோ மீட்டர் தூரம் மட்டுமே பயணித்தது.
தற்போது இந்த டிரக் ,பத்து மாதங்களுக்குப் பிறகு நான்கு மாநிலங்களைக் கடந்து திருவனந்தபுரத்தை எட்டியுள்ளது, ஏரேஸ்பேஸ் ஆட்டோகிளேவ் கருவி ஒரு மாதத்துக்குள் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தில் நிறுவப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக நாடு முழுவதும் முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது சுரேஷ் யாதவ் மற்றும் குழுவினர் ஆந்திர மாநிலம் பனக்கம் (Panakam) பகுதியை அடைந்துள்ளனர். பின்னர் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் பனக்கம் பகுதியிலேயே தங்கி இருந்துள்ளனர். அதன்பிறகு சிறப்பு அனுமதி பெற்று தமிழகம் வழியாக கேரள மாநிலத்தை அடைந்துள்ளனர். ஒவ்வொரு மாநிலம் விட்டு வேறு வாகனங்கள் செல்லும் பொழுது ஊரடங்கு காரணமாக பல்வேறு சிக்கல்களை இந்த குழுவினர் சந்தித்தனர். மீண்டும் இந்த குழுவினர் இரண்டாவது முறையாக விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்திற்கு ஏரோஸ்பேஸ் ஆட்டோகிளேவ் கருவியை கொண்டு வர உள்ளனர்.