பண்டிகை கால ரெயில்களில் இனி தட்கல் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படாது எனவும், வழக்கமான கட்டணமே வசூலிக்கப்படும் எனவும் தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
கொரோனாவால் அனைத்து வழக்கமான ரெயில்களும் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ரத்து செய்யப்பட்டு, அதன்பிறகு சிறப்பு ரெயில்களாக இயக்கப்பட்டு வந்தது.சிறப்பு ரெயில்களாக இயக்கப்பட்ட போதிலும், மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில்களில் எந்தவித கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படவில்லை.
ஆனால் விடுமுறைகால மற்றும் பண்டிகை கால சிறப்பு ரெயில்களில் மட்டும் வழக்கமான கட்டணம் வசூலிக்காமல், தட்கல் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 12-ந்தேதி முதல் அனைத்து சிறப்பு ரெயில்களும் வழக்கமான கட்டணத்தில் வழக்கமான ரெயில்களாகவும், வழக்கமான வண்டி எண்களிலும் இயக்கலாம் என ரெயில்வே வாரியம் அனுமதி அளித்தது.
அதன்படி தெற்கு ரெயில்வே மண்டலம் சென்னையில் உள்ள டிக்கெட் தரவு மையத்தில் 86 விடுமுறை கால மற்றும் பண்டிகை கால சிறப்பு ரெயில்களுக்கான டிக்கெட் கட்டணம், தட்கல் கட்டணத்தில் இருந்து, வழக்கமான கட்டணமாக மாற்றப்பட்டு உள்ளது.
இதேபோல, மற்ற ரெயில்வே மண்டலங்களிலும், கூடுதலாக வசூலிக்கப்பட்ட டிக்கெட் கட்டணம் குறைக்கப்பட்டு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டு உள்ளது. மேலும், மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில்களில் வழக்கமான கட்டணமே வசூலிக்கப்பட்டதால், அதில் எந்தவித கட்டண குறைப்பு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அதேபோல், இந்தியன் ரெயில்வேயின் 5 மண்டலத்தில் உள்ள டிக்கெட் தரவு மையத்தில், ரெயில் வண்டி எண்கள், மீண்டும் வழக்கமான எண்களாக மாற்றம் செய்யும் பணிகள் நடந்து வந்ததால், கடந்த 14-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை 7 நாட்கள், இரவு 11.30 மணி முதல் அதிகாலை 5.30 மணி வரை பயணிகள் டிக்கெட் முன்பதிவு அமைப்பு பகுதியாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், தற்போது அந்த பணி நிர்ணயிக்கப்பட்ட காலத்தை விட, ஒரு நாள் முன்பு அதாவது கடந்த 20-ந் தேதியே முடிவடைந்து, 6 நாட்களிலேயே தெற்கு ரெயில்வேயில் அனைத்து ரெயில் வண்டி எண்களும், வழக்கான எண்களாக மாற்றப்பட்டு உள்ளது.