டெல்லி:-
துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கில் இருந்த ‘ப்ளு டிக்’வசதி திடீரென நீக்கப்பட்ட நிலையில் மீண்டும் ‘ப்ளு டிக்’ கொடுக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் தளங்களை பயன்படுத்தும் பிரபலங்கள் மற்றும் பிரபலமான நிறுவனங்களின் ஐடியை உறுதிப்படுத்துவதற்கு அடையாளமாக ‘ப்ளு டிக்’ வசதியை அந்நிறுவனம் வழங்குகிறது. இந்த ‘ப்ளூ டிக்-கை’ சிலர் பெருமையாக கருதுகின்றனர்.
ஒரு சில காரணங்களுக்காக 2017-ம் ஆண்டு இந்த ப்ளூ டிக் வெரிபிகேஷனை ட்விட்டர் நிறுத்தியிருந்தது. இந்தாண்டு மீண்டும் இந்த வசதியை மீண்டும் கொண்டு வந்தது.
இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு தனிப்பட்ட ட்விட்டர் கணக்கை வைத்திருக்கிறார். அதேபோல் இந்திய குடியரசுத் துணைத் தலைவருக்கான அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தையும் வெங்கையா நாயுடு பயன்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கிற்கு, ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த நீல நிற டிக் வசதியை, டுவிட்டர் நிறுவனம் இன்று காலை அதிரடியாக நீக்கியது. இந்த பக்கத்தை, குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, கடந்த ஆண்டு ஜூலை மாதம் 23ம் தேதி தான் கடைசியாக பயன்படுத்தி உள்ளார்.
தற்போது அவர், குடியரசுத் துணைத் தலைவருக்கான அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தை பயன்படுத்தி வருகிறார். நீல நிற டிக் திரும்ப பெறப்பட்டது குறித்து விளக்கம் அளித்த டுவிட்டர் நிறுவனம், கடந்த சில மாதங்களாக, கணக்கு பயன்பாட்டில் இல்லாததால், நீல நிற டிக் திரும்பப் பெறப்பட்டதாக பதில் அளித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கிற்கு, மீண்டும் நீல நிற டிக் வழங்கப்பட்டு உள்ளது.