டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, உடல்நலக்குறைபாடு, கடும் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்றார். இதையடுத்து இந்தியா திரும்பிய அவர், ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்தார். அரசியல் தலைவர்கள் பலர் அவரை நேரில் சந்தித்தும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் பாராட்டு தெரிவித்தனர்.
இந்நிலையில், அரியானா மாநிலம் பானிபட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நீரஜ் சோரா இன்று பங்கேற்றார். அப்போது அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.
இதையடுத்து, அதே ஊரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நீரஜ் சோப்ராவுக்கு, கடுமையான காய்ச்சல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற 75-வது சுதந்திர தின நிகழ்ச்சியில் நீரஜ் சோப்ரா பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.