இந்தி தினத்தை முன்னிட்டு தாய்மொழியுடன் இந்தியை பயன்படுத்த உறுதிமொழி எடுங்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார்.
இந்தி மொழி, இந்தியாவின் ஆட்சி மொழிகளுள் ஒன்றாக 1949ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி தேர்வு செய்யப்பட்டது. இதனையொட்டி ஆண்டுதோறும் செப்டம்பர் 14ஆம் தேதி இந்தி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தி திவாஸ் தினத்தையொட்டி பல்வேறு தலைவர்களும் இன்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தி தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார்.
அவர் நிகழ்ச்சியில் பேசியதாவது,
இந்தி தினமான இன்று நாட்டு மக்கள் அனைவரும் அலுவல் மொழியான இந்தியையும் தங்கள் தாய் மொழியுடன் சேர்த்து படிப்படியாகப் பயன்படுத்துவதற்கான உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும். இது மிக முக்கியமான ஒன்றாகும்.
தாய்மொழியுடன் அலுவல் மொழியையும் சேர்த்து பயன்படுத்துவதில் தான் இந்தியாவின் முன்னேற்றம் அடங்கியுள்ளது.
‘ஆத்மநிர்பர்’ என்பது நாட்டிற்குள் உற்பத்தி செய்வது மட்டுமல்ல, நாம் மொழிகளுடன் கூட ‘ஆத்மநிர்பர்’ ஆக இருக்க வேண்டும். நமது பிரதமர் சர்வதேச அளவில் கூட இந்தியில் பேச முடிகிறது. பிறகு எது நம்மை சங்கடப்படுத்துகிறது. இந்தியில் பேசுவதால் கவலையாக இருந்த நாட்கள் போய் விட்டன. இனி அந்த சூழல் இல்லை என்று அமித் ஷா பேசினார்.