தமிழகத்தில் கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்படாததால் லட்சக்கணக்கானோர் அங்கு குவிந்தனர். இதனால் புதுச்சேரியில் புத்தாண்டு பிந்தைய கொரோனா பரவல் வெகுவாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
நடப்பு ஆண்டின் புதிய உச்சமாக இன்று ஒரே நாளில் புதுச்சேரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்த நிலையில் நேற்றும் தொற்றால் சிகிச்சைப் பலனின்றி 3 பேர் இறந்துள்ளனர். புதுவையில் பரிசோதனை செய்யும் 3 பேரில் ஒருவருக்குத் தொற்று உறுதியாகி வருகிறது.
கிடுகிடுவென அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன் கல்வியமைச்சர் நமச்சிவாயம் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கும், கல்லூரிகளுக்கும் இன்று முதல் ஜனவரி 31-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுவதாக அறிவித்தார். ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்படும் என்றும், மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் வரை மாணவர்களுக்கான தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.