புனே:-
ஒரே குடும்பத்தில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 9 நாட்களில் கொரோனா தொற்றுக்கு 3 சகோதரர்கள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் பிம்ப்ரி-சிஞ்ச்வாத் (Pimpri-Chinchwad) கிராமத்தை சேர்ந்தவர்கள் போபட்ராவ் கலப்யூர் (66), டைனேஸ்வர் கலப்யூர் (63) திலீப்ராவ் கலப்யூர் (61). சகோதரர்களான இவர்கள் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தனர். மனைவி, மகன்கள், மகள்கள் என இவர்களின் கூட்டுக்குடும்ப உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 18 பேர் ஆகும்.
கலப்யூரின் குடும்ப உறுப்பினர்களில் முதல் நபராக வாலிபர் ஒருவருக்கு கடந்த ஜூலை 5ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து கலப்யூர் சகோதரர்கள் உள்பட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ததில், எஞ்சிய குடும்ப உறுப்பினர்கள் 17 பேருக்கும் வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனால் ஒட்டுமொத்தமாக குடும்ப உறுப்பினர்கள் 18 பேரும் புனேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவர்களில் கலப்யூர் சகோதர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
சகோதரர்களில் முதல் நபராக திலீப்ராவ் கலப்யூர் (61) ஜூலை 10ஆம் தேதி உயிரிழந்தார். அவருக்கு அடுத்தபடியாக ஜூலை 15ஆம் தேதி டைனேஸ்வர் கலப்யூர் (63) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொரு சகோதரரான போபட்ராவ் கலப்யூரும் (66) சிகிச்சை பலனின்றி ஜூலை 18ஆம் தேதி கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தார்.
சகோதரர்கள் மூன்று பேரின் மரணங்களும் ஜூலை 10 முதல் ஜூலை 18 வரையிலான 9 நாட்கள் இடைவெளியில் நடந்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு கூட்டுக்குடும்பத்தின் தலைவர்களான போபட்ராவ் கலப்யூர் (66), டைனேஸ்வர் கலப்யூர்(63), திலீப்ராவ் கலப்யூர் (61) சகோதரர்களின் மரணம் குடும்ப உறுப்பினர்களுக்கு பெரும் இழப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தாக்குதலுக்கு சகோதரர்கள் 3 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோல அப்பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியின் பெற்றோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிறுமியின் தாய் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய சிறுமியின் தந்தை சிறுநீரக கோளாறு காரணமாக உயிரிழந்தார்.
தொழிற்சாலைகள் நிறைந்த நகரமான பிம்ப்ரி-சிஞ்ச்வாத் நகரில் இதுவரை பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 220 பேர் வரை கொரோனாவால் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.