இன்று மாலை கன்னியாகுமரியில் நடைபெறும் பாதயாத்திரை துவக்க விழாவிற்கு சென்னை மீனம்பாக்கத்தில் இருந்து தனி விமானம் மூலம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி திருவனந்தபுரம் புறப்பட்டுச் சென்றார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பாதயாத்திரை என்ற ‘பாரத் ஜோதா யாத்ரா’ செல்கிறார். இதற்கான தொடக்க விழா இன்று மாலை கன்னியாகுமரியில் நடக்கிறது. மொத்தம் 150 நாட்கள் நடைபெறும் இந்த பாதயாத்திரையை ராகுல்காந்தி 3,570 கி.மீ. தூரம் நடந்தே சென்று காஷ்மீரை அடையும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்த பாதயாத்திரையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், அகில இந்திய நிர்வாகிகள், அந்தந்த மாநில நிர்வாகிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோரும் ராகுல்காந்தியுடன் செல்கிறார்கள்.
இந்நிலையில் பாதயாத்திரையில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலமாக ராகுல்காந்தி நேற்று இரவு சென்னை வந்தடைந்ததை தொடர்ந்து இன்று காலை காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ்காந்தி நினைவிடத்திற்கு சென்று அங்கு அலங்கரித்து வைக்கப்பட்ட ராஜீவ்காந்தி உருவப்படத்திற்கும், நினைவிடத்துக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனையடுத்து ராகுல் காந்தி சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்தில் இருந்து தனி விமானத்தில் திருவனந்தபுரம் புறப்பட்டுச் சென்றார். மேலும் திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்கு செல்ல உள்ள ராகுல் காந்தி இன்று மாலை நடைபெறவிருக்கும் இந்திய ஒற்றுமை பாதயாத்திரையை துவங்க உள்ளார்.