புதுடெல்லி:
கொரோனா தொற்று பரவல் முழுமையாக குறையாத நிலை உள்ளதாக ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை,
தெரிவித்துள்ளது. இந்நிலையில் வரும் மாதங்களில் மொஹரம், ஓணம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, நவராத்ரி உள்ளிட்ட பண்டிகைகள் வரவுள்ளன.
இப்பண்டிகைகள் நாட்களில் மக்கள் அனைவரும் ஓரிடத்தில் ஒன்றுகூடுவார்கள் என்பதால் கொரோனா தொற்று வேகமாக பரவும் நிலை ஏற்படும் என சுகாதாரத்துறை கருதுகிறது. கொரோனா பரவல் என்பது முழுமையாக குறையாத நிலையில் விழா காலத்தில் பொதுமக்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க அனைத்து மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொரோனா 2ம் அலை இன்னும் கட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை. இதனிடையே ஒருசில மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி பள்ளிகள் திறப்பது, வணிக வளாகங்களுக்கு அனுமதி போன்ற தளர்வுகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.
எனவே கொரோனா தொற்று பரிசோதனைகளை அதிகப்படுத்துவது, தொற்று உள்ளோரிடம் தொடர்பில் இருந்தவரை கண்டறிந்து தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பது, தடுப்பூசிகளை அதிகளவில் செலுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் தொய்வில்லாமல் மாநிலங்கள் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.