மத்திய பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் பார்க்க சென்ற உள்துறை அமைச்சர் வெள்ளத்தில் மாட்டிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாநிலங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதேபோல், மத்திய பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. அம்மாநிலத்தின் சுமார் 1,800-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன.
அப்பகுதிகளில் இருந்த சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் டாட்டியா மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியை பார்வையிடுவதற்காக மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா சென்று இருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக மீட்புப் படையினருடன் அமைச்சர் சென்ற படகின் மீது மரம் சாய்ந்ததில் எஞ்சின் பழுதானது. இதனால் அமைச்சரும் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டார்.
இதனை தொடர்ந்து ராணுவ வீரர்கள் ஹெலிகாப்டரில் விரைந்து உடனடியாக வெள்ளத்தில் சிக்கிய அமைச்சரை மீட்டனர். மேலும் அமைச்சரோடு சென்ற மீட்பு குழுவினரையும் மீட்டனர்.
வெள்ள மீட்கும் பணியை பார்வையிடுவதற்காக சென்ற மாநில உள்துறை அமைச்சரே வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்ட சம்பவம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.