துபாய்:
துபாயில், கடந்த ஆறு மாதங்களாக வேலை மற்றும் உணவின்றி தவித்த 49 இந்திய தொழிலாளர்கள், துாதரகம் மேற்கொண்ட நடவடிக்கையால் நாடு திரும்பியுள்ளனர்.
மத்திய கிழக்கு நாடான, UAE எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில்,இந்திய நாட்டினர் பலரும், பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.துபாயில் உள்ள ஒரு தச்சுத்தொழில் நிறுவனத்தில், 49 இந்திய தொழிலாளர்கள் பணியாற்றினர். கொரோனாவால் நிறுவனம் மூடப்பட்டதால், ஆறு மாதங்களாக அவர்களுக்கு சம்பளம் எதுவும் வழங்கப்படவில்லை.
அந்நபர்களது பாஸ்போர்ட் மற்றும் வைப்பீட்டு தொகை நிறுவனத்திடம் சிக்கியுள்ளதால் நாடு திரும்ப முடியாமல் தவித்தனர்.இந்த தகவலையறிந்து, துபாயில் உள்ள இந்திய துணை துாதரகமானது 49 பேருக்கும், கடந்த மூன்று மாதங்களாக உணவு வழங்கியது.
இதையடுத்து அந்நாட்டு அதிகாரிகள் உதவியுடன், அவர்களது பாஸ்போர்ட் மற்றும் வைப்பீட்டு தொகை தலா, 60 ஆயிரம் ரூபாய், தொழில் அதிபரிடம் இருந்து திரும்ப பெறப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் அனைவரும், விமானம் மூலம் பத்திரமாக நாடு திரும்பினர்.