குஜராத்
குஜராத் மாநிலம் வதோதராவில் விமானத்தை ஹோட்டலாக மாற்றி அசத்தியுள்ள சம்பவம் வைரலாகி வருகிறது.
இந்த முதல் விமான உணவகத்தை கடந்த திங்கள்கிழமை (அக்டோபர் 25) பொதுமக்களுக்காக திறந்துவைத்துள்ளனர். விமான உணவகம் வதோதரா நகரின் தார்சாலி பைபாஸில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. .
பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்திடம் இருந்து ஏர்பஸ்-320 ரக விமானத்தின் உதிரி பாகங்களை ரூபாய் 1.40 கோடிக்கு விலைக்கு வாங்கியுள்ளனர். விமானத்தின் ஒவ்வொரு பாகமும் வதோதராவுக்கு கொண்டு வரப்பட்டு ஹோட்டலாக வடிவமைத்துள்ளனர்.
இந்த உணவகம் தான் உலகின் ஒன்பதாவது விமானம் உணவகமாகும். இந்தியாவில், ஸ்கிராப் செய்யப்பட்ட விமான பாகங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட நான்காவது உணவகம். ஹோட்டலாக மாற்றப்பட்ட பின்பு விமான உணவகத்தின் தற்போதைய மதிப்பு ரூபாய் 2 கோடியாக உயர்ந்துள்ளது.
102 பேர் அமர்ந்து உணவருந்தும் வகையில் உள்ள இந்த உணவங்கத்தின் பணியாளர்கள் உண்மையான விமானத்தில் பணிபுரியும் பணிப்பெண்கள் போன்று உடை அணிந்து உணவு பரிமாறுகின்றனர்.
ஹோட்டலாக மாறிய முதல் விமானத்தின் நிர்வாக இயக்குநர் முகி கூறுகையில் வாடிக்கையாளர்கள் இந்த உணவகத்துக்குள் வரும் போது, நிஜ விமானத்தில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது என தெரிவித்ததாக கூறினார்.
அத்தோடு விமான உணவகத்தில் பஞ்சாபி, சைனீஸ், இத்தாலியன், மெக்சிகன், தாய், காண்டினெண்டல் உட்பட பல்வேறு வகையான உணவு வகைகளும் கிடைக்கும்” என்று தெரிவித்தார்.