டெல்லி:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி நோக்கி நவம்பர் 26 மற்றும் 27 ஆகிய நாட்களில் மிகப்பெரிய பேரணி நடத்தி, டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்தனர்.அதன்படி பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணியாக புறப்பட்டனர்.
குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ஏராளமான விவசாயிகள் டிராக்டர்களிலும், நடந்தும் டெல்லியை நோக்கி சென்றனர்.ஆனால் இந்த போராட்டத்திற்கு டெல்லி காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. பஞ்சாப் மாநிலத்தில் இருந்து டெல்லி நோக்கிச் செல்லும் அனைத்து பாதைகளையும், ஹரியானா மாநிலத்திற்குள் நுழையும் அனைத்துப் பாதைகளையும் போலீசார் அடைத்தனர். பொதுமக்களின் வாகனங்கள் மட்டும் சோதனைக்குப் பிறகு அனுமதிக்கப்பட்டன.
எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. ஆளில்லா விமானம் மூலமாகவும் போராட்டக்காரர்களை கண்காணிக்கும் பணி நடந்து வருகிறது.தடையை மீறி பேரணியாக செல்ல முயற்சிக்கும் விவசாயிகளை போலீசார் விரட்டியடித்தனர். ஆனால், விவசாயிகள் எல்லையிலேயே முகாமிட்டு தொடர்ந்து டெல்லி செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். எல்லையில் போராட்டம் நடத்துவதால் பதற்றம் நிலவுகிறது.
இந்நிலையில், இன்று காலையிலும் சிங்கு எல்லையில் விவசாயிகள் முன்னேறிச் செல்ல முயன்றனர். தங்களை டெல்லி செல்ல அனுமதிக்கும்படி போராட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி டெல்லி செல்லவும் முயற்சித்தனர். அவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி விரட்டியடித்தனர். இதனால் விவசாயிகள் நிலைகுலைந்து போயினர். ஆனாலும் அந்த பகுதியை விட்டு அகலாமல் உள்ளனர்.