கேரளாவில் பிரபல சீரியல் நடிகையான நிமிஷா பிஜோ படகில் போட்டோஷுட் நடத்திய விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
கேரளாவில் உள்ள பல கோவில்களுக்கு சொந்தமாக நீண்ட பாம்பு வடிவிலான படகுகள் உள்ளன. இந்த படகுகளை கேரள மக்கள் புனிதமாக கருதுகின்றனர். இவற்றை பூஜை செய்த பிறகே விழாக்களுக்கு பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில் பிரபல மலையாள நடிகை நிமிஷா பிஜோ தனது நண்பரான உன்னி என்பவருடன் இணைந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு “பள்ளியோட்டம் போட்டோஷுட்” எனும் ஒரு போட்டோஷுட் நடத்தி இருக்கிறார்.
அப்போது நிமிஷா ஜீன்ஸ் பேண்ட் செருப்பு அணிந்து பம்பை ஆற்றில் சாமி ஊர்வலத்தின்போது பயன்படுத்தப்படும் அரன்முலா கோவிலுக்கு சொந்தமான பாம்பு போன்ற நீண்ட வடிவில் இருக்கும் படகில் ஏறி நின்று புகைப்படம் எடுத்துள்ளார்.
‘அரன்முலா’ கோவிலுக்குச் சொந்தமான இந்தக் கப்பல் பத்தினம் திட்டாவில் உள்ள பம்பை ஆற்றில் சாமி ஊர்வலத்தின்போது பயன்படுத்தப்படும் படகு.
இந்த புகைப்படம் வலைத்தளத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. நிமிஷாவை பலரும் கண்டித்தனர். கேரள தேவஸ்தானம் சார்பில் நிமிஷா மீது நடவடிக்கை எடுக்க போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து நிமிஷாவை போலீசார் கைது செய்தனர்.
நிமிஷா கூறும்போது, ”இந்த படகு புனிதமானது என்று எனக்கு தெரியாது. கேள்விப்பட்டதும் இல்லை. தெரியாமல் இந்த தவறை செய்து விட்டேன்” என்றார். மேலும், இனிமேல் இதுபோன்ற தவறு நடக்காது என்றார். பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.