கான்பூர்:-
உத்தரப்பிரதேசம் கான்பூர் மாவட்டத்தில் முக்கிய ரவுடி ஒருவரை கைது செய்ய போலீஸார் சென்ற போது நடந்த மோதலில் ரவுடிகள் சுட்டதில் டிஎஸ்பி, காவல் ஆய்வாளர் உள்பட 8 போலீஸார் கொல்லப்பட்டனர். 4 போலீஸார் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கான்பூர் மாவட்டம், சவுபேபூர் (Chaubeypur) போலீஸ் சரகத்துக்கு உட்பட்டபகுதி திக்ரு (Dikru) கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி விகாஸ் துபே (Vikas Dubey). இவன் மீது கொலை, கொள்ளை, ஆட்கடத்தல் என 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் ரவுடி விகாஸ் துபே சமீபத்தில் ஒருவரை கொலை செய்ய முயற்சி செய்த வழக்கில் அவரை கைது செய்ய போலீஸார் தேடி வந்தனர். தலைமறைவாக இருந்த ரவுடி விகாஸ் துபே தேஹத் ஷிவ்லி (Dehat’s Shivli) காவல் சரகத்திற்கு உட்பட்ட பிக்ரு (Bikru) கிராமத்தில் தங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து அவனை கைது செய்வதற்காக நேற்று இரவு சென்றனர். டிஎஸ்பி தேவேந்திர மிஸ்ரா தலைமையில் ஆய்வாளர் பில்ஹார், இருதுணை ஆய்வாளர்கள், 5 காவலர்கள் என அடங்கிய குழுவினர் சென்றனர்.
மறைந்திருந்து ரவுடிகள் சுட்டதில் டிஎஸ்பி தேவந்திர மிஸ்ரா, ஆய்வாளர் பில்ஹார், இரு துணை ஆய்வாளர்கள் , 4 காவலர்கள் என 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 4 போலீஸார் காயமடைந்தனர்.
இதையடுத்து, உடனடியாக பக்கத்து மாவட்டமான கன்னூஜ் மாவட்டத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீஸார் வரவழைக்கப்பட்டனர். ஆம்பலன்ஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காயமடைந்த போலீஸார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கிருந்து ரவுடிகள் அனைவரும் தப்பிவிட்டதால் அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து உ.பி. போலீஸ் டிஜிபி ஹெச்.சி.அஸ்வதி நிருபர்களிடம் கூறுகையில்:-
ரவுதி துபேயை கைது செய்யும் நோக்கில் போலீஸார் கிராமத்திற்கு சென்றனர். ஆனால், போலீஸார் இந்த கிராமத்துக்குள் நுழைய முடியாத வகையில் வழியெங்கும் தடுப்புகளையும், தடைகளையும் ரவுடிகள் உருவாக்கி இருந்தனர். அதையும் மீறி போலீஸார் சென்றபோது, ரவுடி துபேயின் ஆட்கள் ஒரு மாடியின் மீது மறைந்திருந்து போலீஸார் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் நடந்துள்ளது. ரவுடிகள் கையில் துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் இருந்திருக்கும் என்பதை போலஸீார் கருதவில்லை. ரவுடிகளைப் பிடிக்க சிறப்பு அதிரடிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
ரவுடிகள் துப்பாக்கிச்சூட்டில் டிஎஸ்பி தேவேந்திர மிஸ்ரா, காவல்நிலைய அதிகாரி மகேஷ் யாதவ், அனுப் குமார், உதவி ஆய்வாளர்கள் நெபுலால், காவலர்கள் சுல்தான் சிங், ராகுல், ஜிதேந்திரா, பப்லு ஆகியோர் கொல்லப்பட்டனர் என்று உ.பி. போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கி சூடு நடந்த திக்ரு கிராமத்துக்கு கான்பூர் கூடுதல் எஸ்.பி. பிரிஜேஸ் ஸ்ரீவத்சவா (Rural), கான்பூர் போலீஸ் ஐஜி, சட்டம் ஒழுங்கு டிஜி, மாவட்ட போலீஸ் எஸ்.பி. ஆகியோர் விரைந்துள்ளனர். தடயவியல் துறையினர் வந்து சம்பவ இடத்தை ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த முதல்வர் யோகி ஆதித்யநாத் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த போலீஸாரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்த முதல்வர் ஆதித்யநாத் இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் மீது கடுமயைான நடவடிக்கை வேண்டும், முழுமையான அறிக்கை அளிக்கவும் போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
ரவுடி விகாஸ் துபே அவனது திக்ரு கிராமத்தின் பஞ்சாயத்து தலைவராக இருந்து வருகிறான் மேலும் ஜில்லா பஞ்சாயத்து உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ரவுடி விகாஸ் துபே கடந்த 2001ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராக ராஜ்நாத் சிங் பதவி வகித்தபோது அவரது அமைச்சர்கள் இடம்பெற்றிருந்த அமைச்சர் சந்தோஷ் சுக்லா என்பவரை ஷிவ்லி காவல் நிலையத்துக்குள் வைத்தே கொலை செய்தான் என்பது குறிப்பிடத்தக்கது.