மும்பை:-
“இந்திய நடன பயிற்சியின் தாய்” என அழைக்கப்படும் பழம்பெரும் நடன இயக்குனர் சரோஜ் கான் (71) மாரடைப்பால் மரணமடைந்தார்.
கடந்த ஜூன்20 அன்று மும்பையில் உள்ள குரு நானக் மருத்துவமனையில் மூச்சுத் திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை 2:30 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், கொரோனா தொற்று இல்லை என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.
சரோஜ் கான் என்று அழைக்கப்படும் இவரது இயற்பெயர் நிர்மலா நக்பால். கடந்த 40 வருடங்களாக, 2000க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களுக்கு நடனப் பயிற்சியாளராக பணியாற்றி உள்ளார். மேலும் மூன்று முறை தேசிய விருதுகள் பெற்றுள்ளார்.
மாதுரி தீக்ஷித்தின் ‘தேசாப்’ படத்தில் இடம்பெற்ற ‘ஏக் தோ தீன்’ பாடல், சஞ்சய் லீலா பன்சாலியின் ‘தேவ்தாஸ்’ படத்தில் இடம்பெற்ற ‘டோலாரே’ பாடல், மற்றும் கரீனா கபூர் நடித்த ‘ஜப் வீ மெட்’ படத்தில் ‘ஏ இஷ்க் ஹாயே’ பாடலுக்காக சரோஜ் கானுக்கு தேசிய விருது கிடைத்தது.
சரோஜ் கான் கடைசியாக ‘கலங்க்’ படத்தில் மாதுரி தீக்ஷித்திற்கு தான் நடனம் அமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரின் மரண செய்தி அறிந்த பாலிவுட் பிரபலங்களும், ரசிகர்களும் கவலை அடைந்துள்ளனர். லாக்டவுன் காலத்தில் பாலிவுட்டில் தொடர் மரணங்கள் நிகழ்கிறது. நடிகர்கள் ரிஷி கபூர், இர்ஃபான் கான் ஆகியோர் புற்றுநோயால் இறந்தார்கள். இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த மாதம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் சரோஜ் கான் மாரடைப்பால் இறந்துவிட்டார்.