கோண்டா:-
உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டாவில் (Gonda) 6 வயது குழந்தையை கடத்திச் சென்று 4 கோடி ரூபாய் பிணைத்தொகை கேட்ட கும்பலை போலீசார் கைது செய்து 12 மணி நேரத்தில் குழந்தையை மீட்டனர்.
உத்திர பிரதேச தலைநகர் லக்னோவில் இருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில் கோண்டா மாவட்டத்தில் உள்ள கோல்னல்கஞ்ச் (Colnelganj) பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்குப்தா. பீடி மட்டும் குட்கா வியாபாரி ஆவார். இவரது 6 வயது பேரனை மர்ம நபர்கள் சிலர் கடத்திச் சென்றனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் கடத்தல் கும்பலைத் தேடி வந்தனர். இந்நிலையில் கடத்தல்காரர்கள் 4 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டல் விடுத்தனர்.
இதையடுத்து அதிரடி நடவடிக்கையில் இறங்கிய காவல்துறையினர் குழந்தையை மறைவிடத்தில் இருந்து மீட்டனர். அப்போது நடந்த என்கவுண்டரில் 2 பேர் காயமடைந்தனர். இந்த கடத்தல் தொடர்பாக தம்பதி உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டவர்கள் சுராஜ் பாண்டே மற்றும் அவரது மனைவி சாவி (Chhavi) அவர்களது உறவினர் ராஜ் பாண்டே உமேஷ் யாதவ் மற்றும் தீபு காஷ்யப் ஆகியோர் ஆவர். இதில் உமேஷ் மட்டும் தீபு ஆகியோர் போலீஸ் நடத்திய என்கவுண்டரில் காயமடைந்தனர்.
நேற்று (வெள்ளிக்கிழமை) மதியம் சிறுவனின் வீட்டிற்கு சனிடைசர் மற்றும் முகக்கவசங்களை விற்பனை செய்வது போல் வந்துள்ளனர். அப்போது அந்த சிறுவனிடம் பேச்சு கொடுத்து தங்களிடம் மேலும் சில முகக்கவசங்கள் இருப்பதாகவும் அதை எடுத்து வரலாம் என்று அழைத்து சென்று தனது வாகனத்தில் கடத்தியுள்ளனர். இந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.