மகாராஷ்டிர மாநிலத்தில் ரயிலில் தவறி விழுந்த கர்ப்பிணிப் பெண்ணைக் சமயோசிதமாக செயல்பட்டு விரைவாக காப்பாற்றிய போலீஸுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
மஹாராஷ்டிர மாநிலத்தில், கல்யாண் ரயில் நிலையம் பிரதான ரயில் நிலையமாக உள்ளது. இந்நிலையில், கல்யாண் ரயில் நிலையத்தில், மெதுவாக சென்று கொண்டிருந்த ஒரு ரயிலில் இருந்து, கர்ப்பிணி பெண் ஒருவர் அவசர அவசரமாக கீழே இறங்க முயற்சித்தார். அப்போது அவர் ரயிலுக்கும், நடைமேடைக்கும் உள்ள இடைவெளியில் நிலைத்தடுமாறி விழுந்தார்.
அந்த நேரத்தில் அங்கு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸ் கான்ஸ்டபிள் எஸ்.ஆர். கண்டகர், விரைந்து சென்று கர்ப்பிணிப் பெண்ணை கீழே விழாமல் காப்பாற்றினார்.
இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சமயோசிதமாக கர்ப்பிணி பெண்ணை காப்பாற்றிய ரயில்வே போலீசுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.
இதனிடையே இது தொடர்பாக, மும்பை மத்திய ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி சிவாஜி சுதர், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ஓடும் ரயிலில் ஏறவோ அல்லது இறங்கவோ வேண்டாம் என பயணிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.