மோடி எங்களுடைய பிரதமர் அவர் குறித்து அவதூறாக பேசுவதையும் எங்கள் உள்நாட்டு (டெல்லி) தேர்தலில் தலையிடுவதையும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது என்று பாகிஸ்தான் அமைச்சர் சௌதாரி ஃபாவத் ஹூசைனுக்கு (Chaudhary Fawad Hussain) டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பதிலடி கொடுத்துள்ளார்.
டெல்லியில் உள்ள 70 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 8ம் தேதி நடைபெற உள்ளது இதன் வாக்கு எண்ணிக்கை 11ம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில்தான் பாகிஸ்தான் அமைச்சர் சௌதாரி ஃபாவத் ஹூசைன் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்திய பிரதமர் மோடி குறித்தும் டெல்லி தேர்தல் குறித்தும் கருத்து தெரிவித்திருந்தார்.
அதில் அவர் கூறியதாவது,
“இந்திய மக்கள் மோடியின் முட்டாள்தனத்தை தோற்கடிக்க வேண்டும். இந்த தேர்தலில் மற்றொரு மாநிலத்தையும் இழந்துவிடுவோமோ என்ற கடும் நெருக்கடியில் மோடி உள்ளார்.
இதனால் அவரது பேச்சுகள் அபத்தமாகவும் பிராந்தியத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதத்தில் உள்ளது.
காஷ்மீர் விவகாரம், குடியுரிமை திருத்த சட்டம், பொருளாதார வீழ்ச்சி ஆகியவற்றின் காரணமாக மோடி தனது ஆதரவை இழந்து விட்டார்” என்று அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பிரதமர் மோடியை விமர்சித்த பாகிஸ்தான் அமைச்சருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவரின் டுவிட்டர் பக்கத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து பதிவிட்டுள்ளார்.
அதில் “நரேந்திர மோடி எங்கள் நாட்டின் பிரதமர். எனக்கும் அவர்தான் பிரதமர். டெல்லி தேர்தல் என்பது எங்கள் நாட்டின் உள் விவகாரம். அதில் தீவிரவாதத்தின் ஊற்றுக்கண்ணாக திகழும் பாகிஸ்தான் தலையிடுவதை நாங்கள் பொறுத்து கொள்ளமாட்டோம்.
எத்தகைய முயற்சிகளை பாகிஸ்தான் மேற்கொண்டாலும் அவர்களால் இந்தியாவின் ஒற்றுமையை சிதைக்க முடியாது” என தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடிக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கும் இடையே உரசல்கள் இருந்தாலும், டெல்லி தேர்தலில் இருவரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து வந்த போதிலும்,
பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் மோடியை விமர்சித்த உடன் பிரதமர் மோடிக்கு ஆதரவாக கெஜ்ரிவால் பேசியுள்ளது தேர்தல் வட்டாரத்தில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.