பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு 2வது முறையாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கோரதாண்டவம் ஆடி வரும் கொரோனா தொற்றுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என அடுத்தடுத்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அரியலூர் மாவட்ட திமுக செயலாளரும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான எஸ்.எஸ்.சிவசங்கருக்கு 2வது முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் அரியலூரில் உள்ள தனது வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்;- உடல் சோர்வு, சளி, காய்ச்சலை தொடர்ந்து, கடும் தொண்டை வலி ஏற்பட்டதால் சோதனை செய்து கொண்டதாகவும், இதில் மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் சமீபத்தில் தன்னை சந்தித்தவர்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கடந்த ஆண்டு அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, பின்னர் அவர் குணமடைந்த நிலையில் 2வது முறையாக தொற்று ஏற்பட்டுள்ளது.