இந்தியா நியூசிலாந்து அணிகள் இடையேயான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
ஹாமில்டனில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா அபாரமாக விளையாடி அரைசதம் அடித்தார். இதனைத் தொடர்ந்து கேப்டன் விராட்கோலி 38 ரன்களும், கேஎல் ராகுல் 27 ரன்களும், எடுக்க 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 179 ரன்களை குவித்தது.
180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் இந்திய அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் விளாசித் தள்ளி 95 ரன்கள் குவித்தார். அந்த அணியும் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுக்க ஆட்டம் சமனில் முடிந்தது.
இதனை தொடர்ந்து வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சூப்பர் ஓவர் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி ஒரு ஓவரில் 17 ரன்கள் எடுத்தது.
ஒரு ஓவரில் 18 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய இந்திய அணியில் ரோகித் சர்மா 4 பந்துகளை சந்தித்து 2 சிக்சர் உட்பட 15 ரன்கள் எடுக்க இந்திய அணி சூப்பர் ஓவரில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று முதல்முறையாக நியூசிலாந்து மண்ணில் டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றி சாதனை படைத்துள்ளது .