32ஆவது ஒலிம்பிக் தொடர், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற மல்யுத்தம் 65 கிலோ எடைப் பிரிவு காலிறுதிப் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா அபார வெற்றிபெற்று, அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா கிர்கிஸ்தானைச் சேர்ந்த எர்னாஸர் அக்மாட்டாலிவை எதிர்கொண்டார். இதில் வெற்றி பெற்ற பஜ்ரங் புனியா காலிறுதிக்கு முன்னேறினார்.
காலிறுதியில் ஈரானைச் சேர்ந்த மோர்ட்டேசா சியாசி செகாவை எதிர்கொண்டார். 2-1 என முன்னிலைப் பெற்றிருந்த பஜ்ரங் புனியா, 4.56 நிமிடத்தில் ஈரான் வீரரை கீழே சாய்த்து இரண்டு தோள்பட்டையும் தரையில் படும்படி அழுத்திப்பிடித்தார். இதனால் Victory by Fall முறையில் பஜ்ரங் புனியா வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார்.
இதன்மூலம் அவர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். அரையிறுதியில் அஜர்பைஜான் வீரர் ஹஜி அலியேவ்-ஐ எதிர்கொள்கிறார்.