மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று சமநிலையில் இருந்தன. இந்நிலையில் கட்டாக்கில் இன்று நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் பூரன்-பொல்லார்ட் இணையின் அதிரடியில் அந்த அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 315 ரன்கள் குவித்தது. கடைசி 5 ஓவர்களில் மட்டும் மேற்கிந்திய தீவுகள் அணி 77 ரன்களை குவித்ததால் 314 ரன்கள் என்ற கடினமான இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்தது. இந்திய அணி தரப்பில் நவ்தீப் சைனி 2 விக்கெட்டுகளையும், ஷர்துல் தாகூர், ஜடேஜா, சமி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா (63 ரன்கள்), கேஎல் ராகுல் (77 ரன்கள்) மற்றும் கேப்டன் விராட் கோலி (89 ரன்கள்) ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 48.4 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கான 316 ரன்களை கடந்தது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்தது. ஏற்கனவே மேற்கிந்தியத் தீவுகள் அணியுடனான 20 ஓவர் தொடரையும் 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. அதேபோல் ஒருநாள் அரங்கில் இந்திய அணி தொடர்ச்சியாக 10 தொடர்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.