இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் சர்வதேச போட்டிகளில் இருந்து விலகியிருக்கவுள்ளதாக திடீரென அறிவித்துள்ளார்.
தலைசிறந்த ஆல்-ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ், 2011ஆம் ஆண்டுமுதல் இங்கிலாந்து அணிக்காக விளையாடி வருகிறார். கடைசியாக நடைபெற்ற 2019ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையில், இறுதிப் போட்டியில் அபாரமாக விளையாடி இங்கிலாந்து அணிக்குக் கோப்பை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தார்.
தன்னுடைய விரலில் ஏற்பட்டுள்ள காயத்திலிருந்து மீள வேண்டும், மனரீதியாக நலம்பெற வேண்டும் என்பதால், காலவரையற்ற ஓய்வு எடுத்துக்கொள்வதாக ஸ்டோக்ஸ் அறிவித்துள்ளார்.
மனநலத்திற்கு முன்னுரிமை அளிப்பதற்காக காலவரையற்ற விடுப்பை ஸ்டோக்ஸ் எடுத்துக் கொள்வதாகவும், எதிர்காலத்தில் அணிக்காக மீண்டும் விளையாடுவதை எதிர்நோக்குவதாகவும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நிர்வாக இயக்குநர் ஆஷ்லே கில்ஸ் தெரிவித்தார். பென் ஸ்டோக்ஸின் அறிவிப்பை தொடர்ந்து, இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கிரெய்க் ஓவர்டன் சேர்க்கப்பட்டுள்ளார்.