‘சங்கஷ்டம்’ என்றால், கஷ்டங்கள் சேருதல் என்று பொருள். வாழ்வில் சேரும் சகல சங்கடங்களையும் நீக்கும் சதுர்த்தி விரதம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.
பௌர்ணமியை அடுத்த நான்காம் நாள், சங்கடஹர சதுர்த்தி தினம் வருகிறது. அன்றைக்கு மாலையும் இரவும் சேரும் நேரத்தில் விநாயகருக்கு வழிபாடு செய்தால் வாழ்வின் அனைத்து நன்மைகளும் நமக்கு கிட்டும்.
முதன்முதலில் சதுர்த்தி விரதம் கடைப்பிடித்த பிறகுதான், கிருத்திகை, ஏகாதசி, பௌர்ணமி போன்ற மற்ற விரதங்களை மேற்கொள்ள வேண்டும் என்பது சாஸ்திரத்தில் பொதுவான நியதி.
சதுர்த்தி தினம் அன்று, காலையில் குளித்துவிட்டு, அருகிலுள்ள ஆலயத்துக்குச் சென்று அங்கு முதன்மையாக இருக்கும் பிள்ளையாரை 11 முறை வலம் வர வேண்டும். அருகம்புல் கொடுத்து, விநாயகருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். தோப்புக்கரணம் போட்டும் விநாயக பெருமானை வணங்க வேண்டும்.
கோயிலுக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்ததும், கொஞ்சம் பச்சரிசியை ஊறவைத்து, அத்துடன் சிறிது வெல்லத்தூளும் ஒரு வாழைப்பழமும் சேர்த்துப் பிசைந்து, பசுவுக்குக் கொடுப்பது புண்ணியத்தை தரும். கணபதியோடு பசு வழிபாடு செய்வது கூடுதல் நன்மை தரும்.
வீட்டிலேயே மோதகம், , பால், தேன், கொய்யா, வாழை, நாவல், கொழுக்கட்டை, சுண்டல் என்று தயாரித்து விநாயகருக்கு நைவேத்தியம் செய்து வழிபடலாம்.
விநாயகருக்குப் மிகவும் பிடித்த இலை வன்னி இலை. வன்னி இலைகளால் விநாயகரைப் பூஜிப்பது அனைத்து விதங்களிலும் சிறப்பான பலன்களைத் தரும்.