மக்கள் தம் எண்ணங்களை தடங்கலற்று வெளிப்படுத்த தாய்மொழியே தகுந்த மொழியாகும்.திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையானது, செம்மொழியுமான தமிழ் 1957 ஆம் ஆண்டு ஜனவரி 23-ஆம் நாளன்று சென்னை மாநிலத்தின் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது.
இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிகளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரீசியஸ், பிஜி, ரீயூனியன், டிரினிடாட் போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது. ஒரு மொழியை தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் பதினெட்டாவது இடத்தில் தமிழ் மொழி உள்ளது.
இந்தியாவில் தமிழ்நாட்டிலும், புதுச்சேரி ஒன்றிய பகுதியில் தமிழ் அரசு அலுவல் மொழியாக உள்ளது. இந்தியாவில் 2004-ம் ஆண்டு ஜுன் 6-ம் தேதி அப்போதைய குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்களால் செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது. இந்த அங்கீகாரம் பெற்றுள்ள முதல் இந்திய மொழி தமிழ் என்பது பெருமைப்படக்கூடியது.
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் பல்வேறு துறை அரசுப் பணியாளர்களுக்கு அரசுப் பணிகளில் தமிழைப் பயன்படுத்துவதற்கும், தமிழில் கோப்புகளை எழுதுவதற்கும் பயிற்சியளிக்கும் விதமாக மாவட்டங்கள் தோறும் ஆட்சிமொழிப் பயிலரங்கம் எனும் தலைப்பில் பயிலரங்குகளை நடத்தி வருகிறது.
இப்பயிலரங்கில் ஆட்சிமொழி வரலாறு, ஆட்சிமொழிச் சட்டம், ஆட்சி மொழிச் செயலாக்கம் தொடர்பாக பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இதற்காக தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் 9.30 இலட்சம் செலவிடுகிறது.இவை தவிர ஆட்சிமொழிக் கருத்தரங்கத்திற்கும் 6.40 இலட்சம் ரூபாய் செலவு செய்கிறது.