“பிரிட்டீஸ்காரர்கள் கட்டமைத்த மெட்ராசை சென்னையாக்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர்” என்று சென்னை தினமான இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னைப் பட்டினம் 1639ஆம் ஆண்டு உருவானதன் அடிப்படையில் இன்று சென்னைக்கு 383வது பிறந்த நாள். கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 22ஆம் தேதி சென்னை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி இன்று(ஆகஸ்ட் 22) சென்னை தினத்தை கொண்டாடும் வகையில் மாநகராட்சி, இந்திய தொழில் கூட்டமைப்புடன் இணைந்து நேற்று பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை சாலையில் தமிழ்நாட்டின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை வெளிக்கொணரும் வகையில் சிறப்பு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுகள் போன்றவை நடத்தப்பட்டன. மேலும் வண்ண விளக்குகள், கேளிக்கை, விளையாட்டுகள் என அந்த பகுதியே திருவிழாக் கோலம் பூண்டது. கனமழை பெய்த போதிலும் சென்னை தினம் உற்சாகமாக ஆட்டம் பாட்டம், கொண்டாட்டம் என மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது
இந்நிலையில் 383வது சென்னை தினம் கொண்டாடப்பட்டு வரும் வேளையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் “பிரிட்டிஷார் கட்டமைத்த மெட்ராசை சென்னையாக்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர். அதற்கு இன்னைக்கு 383வது பிறந்தநாள். திராவிட மாடல் ஆட்சிக்காலத்தின் திட்டங்களுக்கு சென்னை ஒரு ரோல் மாடல்.
இப்ப நீங்க பார்க்கும் இந்த நவீனச் சென்னையை வடிவமைப்பதில், மேயராக இருந்த என் பங்களிப்பும் இருக்கு என்பதில் பெருமை. நீங்க எதிர்பார்க்கும் இன்னும் நிறைய சம்பவங்களை செய்யப் போறோம். காத்திருங்கள்.” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.