பரங்கிப்பேட்டை அருகே தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த திமுக வேட்பாளர் மக்களுக்கு பிரியாணி விருந்து அளித்துள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் கடலூர் மாவட்டத்தில் 25 வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு திமுகவின் முத்துப் பெருமாள் போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கையின் முடிவில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளரை விட 3 ஆயிரம் ஓட்டுகள் குறைவாகப் பெற்று தேர்தலில் முத்துப் பெருமாள் தோல்வியடைந்தார்.
ஆனாலும் தோல்வியை கண்டு துவளாத முத்துப் பெருமாள், தனக்கு வாக்களித்த மக்களுக்கு மறுநாளே நேரில் சென்று நன்றி கூறினார். அதுமட்டுமின்றி விரைவில் பிரியாணி விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளேன் எனவும், அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் எனவும் அழைப்பு விடுத்திருந்தார்.
அதன்படி பெரியப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட பெரியாண்டிக்குழி கிராமத்தில் நேற்று முன்தினம் கிராம மக்களுக்கு பிரியாணி விருந்து நடைபெற்றது. இதில் 600க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்று சாப்பிட்டனர்.
இதுகுறித்து முத்துப் பெருமாள் கூறுகையில், எனக்கு வாக்களித்தவர்களில் அதிக வாக்குகள் பெரியாண்டிக்குழி கிராமத்தில் இருந்ததுதான் கிடைத்தது என்பது தெரியவந்தது. இதனால் அவர்களுக்கு பிரியாணி விருந்து வைத்துள்ளேன். இதேபோல் 25வது வார்டுக்குட்பட்ட மற்ற கிராமங்களிலும் உள்ள வாக்காளர்களுக்கும் பிரியாணி விருந்து நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார். தேர்தலில் தோல்வியுற்றாலும் கிராம மக்களுக்கு பிரியாணி விருந்து வைத்த திமுக வேட்பாளரின் நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது