நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் கிருஷ்ணன் தலைமையில் நிதிநிலை அறிக்கை தயாரிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் நிதி நிலை அறிக்கை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் கடைசி முழு பட்ஜெட் இது என்பதால் முக்கிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு குறித்தும், புதிதாக அறிவிக்கப்பட வேண்டிய திட்டங்கள் பற்றியும் அமைச்சரவை கலந்தாலோசிக்கப்படும்.
அதேசமயம் புதிய தொழில் திட்டங்கள், தொழில் நிறுவனங்கள் விரிவாக்கம் ஆகியவற்றிற்கு ஒப்புதல் அளிக்கவும் வாய்ப்புள்ளது. முக்கிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது பற்றி ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
நெல் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுபற்றியும் அரசு பரிசீலித்து அறிவிப்பு வெளியிடக்கூடும். இதையடுத்து தற்போதைய அரசியல் சூழல் குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படலாம்