திருநெல்வேலியில் உள்ள ரயில்வே ஸ்டேஷன் தேவர்சிலை பகுதியில் செல்போன் கடைகள் அதிகளவு உள்ளது. இப்பகுதியில் சிறிய அளவிலான செல்போன் கடைகள் முதல், பெரிய நிறுவனங்களின் அலைபேசி கடையும் உள்ளது.
இந்த பகுதியில் செயல்பட்டு வந்த அலங்கார் என்ற செல்போன் கடை உரிமையாளர், கடந்த 21 ஆம் தேதி புதிதாக ஆறாவது கிளையை இப்பகுதியில் திறந்துள்ளார். கடைதிறப்பை முன்னிட்டு மக்களுக்கு சலுகையும் அளிக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு சலுகையாக ரூ.6 க்கு ஹெட்செட் மற்றும் ரூ.6 க்கு டெம்பர் கிளாஸ் போன்றவை விற்பனை செய்யப்படும் என்றும், இதற்கு வாடிக்கையாளர்கள் தங்களின் செல்போன் நம்பரை பதிவு செய்தால், நாளொன்றுக்கு 100 பயனாளிகளுக்கு சலுகை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
இதனை அறிந்த மக்கள் கடை திறப்பதற்கு முன்னதாக கூட்டமாக திரண்டிருந்தனர். கடை திறப்பிற்கு பின்னரும் மக்கள் தங்களின் செல்போன் எண்ணை பதிவு செய்வதில் ஆர்வமாக இருந்தனர். இதனால் சமூக இடைவெளி காற்றில் பறக்க விடப்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர், கடைக்கு சீல் வைத்து மக்களை சம்பவ இடத்திலிருந்து விரட்டி அடித்தனர்.