இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கு ஜூலை 18ம் தேதி வகுப்புகள் தொடங்கப்படும் எனவும் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியான பிறகு தான் பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கும் எனவும் உயர்கல்வித்துத்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, இந்தாண்டு பொறியியல் படிப்புகளில் சேர இதுவரை 85,902 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். பொறியியல் படிப்பு கிடைக்கவில்லை என்கிற ஏக்கம் மாணவர்களுக்கு இருக்க கூடாது என முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்றும் பாலிடெக்னிக்தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பொறியியல் இரண்டாம் ஆண்டில் சேர்ந்து கொள்ள 2% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும், அண்ணா பல்கலைக்கழகம், உறுப்பு கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகளிலும் 2% இட ஒதுக்கீட்டில் இந்தாண்டே தொழிற்கல்வி மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கப்படுவார்கள் என்றும் கூறினார்.
மேலும் உயர்கல்வி பயிலும் அரசுப்பள்ளி மாணவிகளுக்கு மகளிர் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை அடுத்த மாதம் முதல்வர் தொடங்கி வைப்பார் எனவும் கூறினார்.
மேலும் இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கு ஜூலை 18ம் தேதி வகுப்புகள் தொடங்கப்படும் எனவும் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியான பிறகு தான் பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கும் எனவும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார்.