பிரிட்டனில் இருந்து மதுரை திருப்பிய பயணி ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
பிரிட்டனில் வேகமாக பரவி வரும் மரபியல் மாற்றமடைந்த புதிய கொரோனா தொற்று காரணமாக இந்தியாவிலும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடிக்கிவிடப்பட்டுள்ளன. அதனை தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனையடுத்து தமிழகத்திலும் பிரிட்டனில் இருந்து வந்தவர்களுக்கு தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
லண்டனில் இருந்து மதுரை திரும்பிய நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியான மதுரையைச் சேர்ந்த ஒருவருக்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உள்ள மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் இருந்து சென்னை திரும்பிய நபருக்கு ஏற்கனவே தொற்று கண்டறியப்பட்டு இருந்த நிலையில் தற்போது மேலும் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை வந்த 88 பயணிகளில் 29 பேருக்கு கொரோனா அறிகுறி தென்பட்ட நிலையில் அதில் ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டது.பிரிட்டனில் வேகமாக பரவும் உருமாறிய கொரோனா தொற்றா என்பது ஆய்வுக்கு பிறகே தெரியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவருக்கு வேறு உடல்நல சிக்கல்கள் ஏதும் இல்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியுள்ளது. அவர்களில் 97 லட்சம் பேர் குணமடைந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும், தற்போது மரபியல் மாற்றமடைந்து பரவி வரும் புதிய கொரோனா தொற்றால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.