தமிழகம் முழுவதும் பொது இடங்கள், சாலைகளில் உள்ள தலைவர்கள் சிலைகளை 3 மாதங்களில் அகற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேலூர் மாவட்டம், அரக்கோணம் தாலுக்கா, கோனுர் கண்டிகை கிராமத்தில் உள்ள மேய்கால் புறம்போக்கு நிலத்தில் அம்பேத்கர் சிலை நிறுவப் பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் அனுமதி பெறாமல் சிலை வைக்கப்பட்டுள்ளதால், சிலையை அகற்ற தாசில்தார் உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்து, அந்த கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் வீரராகவன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு இன்று (அக். 07) விசாரணைக்கு வந்தது. அப்போது, நெடுஞ்சாலைகளில் சிலைகள் வைக்கக் கூடாது என உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், சிலையை அகற்றியதில் எந்தத் தவறும் இல்லை என, அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், தாசில்தார் விதிமுறைகளை பின்பற்றியே சிலையை அகற்றியுள்ளார் என்று கூறி வழக்கை முடித்து வைத்தார்.
இதையடுத்து, சட்ட விதிகள் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம். தமிழகம் முழுவதும் பொது இடங்கள், நெடுஞ்சாலைகள், அரசு நிலங்கள், பொதுச் சாலைகள், மேய்க்கால் புறம்போக்கு ஆகிய இடங்களில் உள்ள சிலைகளை 3 மாதங்களில் அடையாளம் கண்டு அகற்ற வேண்டும் என நீதிபதி தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.
சாலைகள், பொது இடங்களில் இருக்கும் சிலைகளை பராமரிக்க தலைவர்கள் பூங்கா உருவாக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். இங்கே, நீக்கப்பட்ட சிலைகளை அங்கே வைத்து, யார் தலைவர்கள் சிலைகளை வைத்தார்களோ அவர்களே அதனை பராமரிக்க வேண்டும் என்றும் நீதிபதி எஸ். எம். சுப்ரமணியம் அறிவித்தார்.
அரசியல் தலைவர்கள் தங்களின் விருப்பப்படி சிலைகளை, விரும்பிய இடங்களில் வைக்கின்றனர் என்று கூறிய நீதிபதிகள் சமுதாயத்திற்காக தியாகம் செய்தவர்கள் எந்த நேரத்திலும் சாதி, மத அடிப்படையில் அடையாளம் காணப்படக் கூடாது என்றனர்.
பொது மக்களின் உரிமைகளை பாதிக்காத வகையில் சிலைகள் அகற்றுவது தொடர்பாக விரிவான விதிகளை தமிழக அரசு வகுக்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், நெடுஞ்சாலைகள், அரசு புறம்போக்கு நிலங்களில் சிலைகள் அமைக்க இனி அனுமதி வழங்க கூடாது என்றனர்.
தமிழகம் முழுவதும் பொது இடங்களில், சாலைகளில் வைக்கப்பட்டிருக்கும் சிலைகளை 3 மாதங்களுக்குள் அகற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.