சென்னை :
லடாக் எல்லையில் வாகன விபத்தில் உயிரிழந்த தூத்துக்குடியைச் சேர்ந்த ராணுவ வீரர் மரணத்திற்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதனையடுத்து முதலமைச்சர் திரு. எடப்பாடி மு. பழனிசாமி அவர்களின் அறிக்கையில்,”காஷ்மீர், லடாக் பகுதியில், இந்திய ராணுவத்தின் ஆர்ட்டிலெரி படைப்பிரிவில் பணியாற்றி வந்த, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், திட்டான்குளம் கிராமத்தைச் சேர்ந்த இராணுவ வீரர் நாயக் கருப்பசாமி (த/பெ. திரு. கந்தசாமி) என்பவர் 18.11.2020 அன்று எதிர்பாராத விதமாக வாகன விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த துயரம் அடைந்தேன்.
உயிரிழந்த இராணுவ வீரர் நாயக் கருப்பசாமி அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.மேலும், இராணுவ வீரர் நாயக் கருப்பசாமி அவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்தவும், மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு.கடம்பூர் ராஜு மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த இராணுவ வீரர் நாயக் கருப்பசாமி அவர்களின் குடும்பத்தில் யாரேனும் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்”எனத் தெரிவித்துள்ளார்.