பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சனிக்கிழமை ஆசிரியர்களுக்கு விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் வேகம் தீவிரமடைந்து வரும் நிலையில் ஜனவரி 31ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும், அனைத்து கல்லூரிகளுக்கும் ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்களை பொறுத்தவரை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மாணவர்கள் இல்லாததால் ஆசிரியர்களுக்கும் சனிக்கிழமை விடுப்பு அளித்து பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா பெருந்தொற்று காரணமாக மாணவர்களின் நலன் கருதி 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் இரத்து செய்யப்பட்டு 31.01.2022 வரை மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் மேற்கண்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நாட்களில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மாணவர்கள் இன்றி பள்ளிகள் செயல்படுவதால் 22.01.2022 அன்று சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது. எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.