5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டபடிப்புக்கு விண்ணப்பிக்க வரும் ஆகஸ்ட் 31ம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பல்வேறு அரசு சட்டக் கல்லூரிகளில் பிஏ. எல்எல்பி 5 ஆண்டு சட்டப் படிப்பும் வழங்கப்படுகின்றன. இப்படிப்புகளில் நடப்பு கல்வியாண்டில் (2021-22) சேர ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பிளஸ் 2 முடித்த மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் இணையதளம் மூலமாக கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கூடுதலாக காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கு www.tndalu.ac.in என்ற இணையதளத்தை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளது. என்.ஆர்.ஐ. எனும் வெளிநாடு வாழ் தமிழர் பிரிவில் ஒதுக்கீடு கேட்போர், தங்கள் விண்ணப்பங்களை சட்ட பல்கலைக்கு நேரில் வந்து, உரிய ஆவணங்களுடன் அளிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.