சென்னை:
முந்தைய அ தி மு க ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த அமைச்சர் செந்தில்பாலாஜி வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்டதாக வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான இந்த வழக்கு எம்.பி – எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சண்முகம் என்பவர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி நிர்மல் குமார் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது காணொளி காட்சி மூலம் வழக்கில் சம்பந்தப்பட்ட புகார்தாரர்கள் ஆஜராகி, அமைச்சரிடம் கொடுத்த பணத்தை திருப்பி பெற்றுக் கொண்டதாக தெரிவித்தனர். இதை பதிவு செய்த நீதிபதி நிர்மல் குமார், அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையில் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ள விவரத்தை குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து உயர் நீதிமன்ற உத்தரவின் நகலை சமர்ப்பிக்க செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு ஆகஸ்ட் 19-ம் தேதி வரை கெடு விதித்தனர். எனவே சிறப்பு நீதிமன்ற நீதிபதி, விசாரணையை ஆகஸ்ட் 19-ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.