சென்னை: தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற சுமார் 27 ஆயிரம் உள்ளாட்சி பிரதிநிதிகள் இன்று பதவியேற்கின்றனர்.
தமிழகம் முழுவதும் கடந்த 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. அதன் முடிவுகளும் அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு வெற்றி சான்றிதழும் அளிக்கப்பட்டு விட்டன.
9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் 153 வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றியங்களில் 1421 வார்டு கவுன்சிலர்கள், 3007 கிராம பஞ்சாயத்து தலைவர்கள் என மொத்தம் 27,792 பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது.
கள்ளக்குறிச்சி புதிய மாவட்டம் உருவாகி முதன் முதலாக உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, திருக்கோவிலுார், சின்னசேலம், ரிஷிவந்தியம், சங்கராபுரம், தியாகதுருகம், உளுந்துார்பேட்டை, திருநவாலுார், திருக்கோவிலுார், கல்வராயன்மலை ஆகிய 9 ஒன்றியங்களை கொண்டுள்ளது.
இதில், 19 மாவட்ட கவுன்சிலர்கள், 180 ஒன்றிய கவுன்சிலர்கள், 412 ஊராட்சி தலைவர்கள், 3,162 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 3,773 உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடந்தது.தேர்தல் முடிவில் பெரும்பான்மையான இடங்களில் தி.மு.க., வெற்றி பெற்று, 9 சேர்மன் பதவிகளையும் தக்க வைத்து கொண்டது.
ஒன்றிய கவுன்சிலர்களில் தி.மு.க., -145, அ.தி.மு.க.,- 16, சுயேட்சை 10, மற்ற கட்சிகள்-9 என வெற்றி பெற்றது. அதேபோல், 19 மாவட்ட கவுன்சிலர்கள் பதவிகளையும் தி.மு.க., பிடித்தது.தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பதவியேற்பு இன்று 20ம் தேதி நடக்கிறது.
ஒன்றிய கவுன்சிலர்களுக்கு, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், மாவட்ட கவுன்சிலர்களுக்கு கலெக்டர் அலுவலகத்திலும் பதவியேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.அதேபோல், ஊராட்சித் தலைவர்கள் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு அந்தந்த ஊராட்சி அலுவலகத்தில் நடக்கிறது.
தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளாட்சி பிரநிதிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கின்றனர்.
ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், ஊராட்சி அலுவலகங்களில் பதவியேற்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வரும் 22ம் தேதி ஒன்றிய சேர்மன், துணை சேர்மன், மாவட்ட சேர்மன், துணை சேர்மன் பதவியிடங்களுக்கான மறைமுக தேர்தல் நடத்தப்படுகிறது.
இன்று நடக்கும் பதவியேற்பு உறுதிமொழி நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் மட்டுமே மறைமுக தேர்தலுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.