மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லமான வேதா நிலையத்தை அரசுடமையாக்கிய சட்டம் ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வேதா நிலையம் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றப்படும் என முந்தைய அதிமுக அரசு அறிவித்திருந்தது. அதை செயல்படுத்தும் விதமாக சட்டம் இயற்றப்பட்டு, வேதா நிலையத்தையும் அங்குள்ள அசையும் சொத்துக்களையும் அரசுடமையாக்கப்பட்டது.
இந்த சட்டத்தை எதிர்த்து ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா, தீபக் ஆகிய இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதேபோல, வேதா நிலையத்துக்கு 67 கோடியே 90 லட்சம் ரூபாயை இழப்பீடாக நிர்ணயித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்தும் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
மேலும், தனிநபர் சொத்துக்களை கையகப்படுத்துவது தொடர்பாக சட்டம் இயற்ற அரசுக்கு அதிகாரமில்லை எனவும், வேதா நிலையத்தை அரசுடமையாக்கி பிறப்பித்த சட்டத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த வழக்குகள் அனைத்தையும் நீதிபதி சேஷசாயி விசாரித்தார். இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், சொத்துகுவிப்பு வழக்கில் A1 குற்றவாளியான ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை அரசுடமை ஆக்கியது செல்லாது என உத்தரவிட்டுள்ளது.
மேலும், 3 வாரத்துக்குள் வேதா நிலையத்தை வாரிசு தாரர்களிடம் ஒப்படைக்க வேண்டும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.