சென்னை:-
ஜெயலலிதா மறைந்த பிறகு தமிழ்நாட்டையே காணவில்லை, அதை மீட்டெடுக்கும் பணியில் புதிய அரசு ஈடுபட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று உயர் கல்வித்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது அதிமுக எம்எல்ஏவும் முன்னாள் உயர் கல்வித் துறை அமைச்சருமான அன்பழகன், ஜெயலலிதா பல்கலைக்கழகம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட விவகாரத்தில் திமுக அரசு காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாக குற்றஞ்சாட்டினார்.
விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாகத் தொடங்கப்பட்ட ஜெயலலிதா பல்கலைக்கழகம், மீண்டும் அதே பெயரில் செயல்பட வேண்டும் என்றும் அன்பழகன் கோரிக்கை வைத்தார்.
இதற்கு எழுந்து பதிலளித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ஜெயலலிதா பல்கலைக்கழகம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும் என்றார். இதைக் கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தார்கள்.
இதற்கு சட்டப்பேரவையில் விளக்கமளித்து பேசிய முதல்வர் ஸ்டாலின் , “ஜெயலலிதா பல்கலைக்கழகம் உருவானதை காழ்ப்புணர்ச்சியோடு தடுப்பதாக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்; அரசுக்கு காழ்ப்புணர்ச்சி கிடையாது, அப்படி இருந்திருந்தால் அம்மா உணவகம் இருந்திருக்காது” என்றார்.
இதனிடைய பள்ளிக்கல்வித் துறை மீதான மானியக் கோரிக்கையும் நடைபெற்றது. அப்போது பேசிய அத்துறையின் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “ஜெயலலிதா மறைந்த பிறகு தமிழ்நாட்டையே காணவில்லை. அதை மீட்டெடுக்கும் பணியில் புதிய அரசு ஈடுபட்டுள்ளது” என்றார்.
ஏற்கனவே நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஜெயலலிதா ஆரோக்கியமாக இருந்தவரை தமிழ்நாட்டின் நிதி நிலைமையும் நன்றாகத்தான் இருந்தது, அவர் நோய்வாய்ப்பட்ட பிறகு நிதி நிலை சரிவடையத் தொடங்கியது என்று தெரிவித்திருந்தார். தற்போது அன்பில் மகேஷும் வழிமொழிந்திருக்கிறார்.