ஈரோடு:-
ஈரோடு மாவட்டத்தில் சிகிச்சையில் இருக்கும் நான்கு கொரோனா நோயாளிகளும் இன்று குணமாகி வீடு திரும்புகின்றனர். இதையடுத்து, கொரோனா தொற்று நோயாளிகள் இல்லாத மாவட்டமாக ஈரோடு மாறியது. மேலும் தொடர்ந்து 13 நாட்களாக தொற்று உறுதி செய்யப்படாததால், மாவட்டத்தில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வாய்ப்புள்ளதாக அதிதகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் துவக்கத்தில் சென்னையை அடுத்து கொரோனாவால் அதிகளவில் பாதிக்கப்பட்ட மாவட்டமாக ஈரோடு இருந்தது. தாய்லாந்து நாட்டில் இருந்து வந்த 6 பேரில் 2 பேருக்கு கொரோனா கண்டுபிடிக்கப்பட்டதும் ஈரோடு மாவட்டம் பரபரப்பாக மாறியது.
2 பேருடன் எண்ணிக்கை முடிந்து விடாமல் தினசரி ஈரோட்டை சேர்ந்தவர்களுக்கு கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டே இருந்தது. மார்ச் 31ஆம் தேதி வாக்கில் பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஒற்றை எண்ணிக்கையில் இருந்தது. அப்போது ஈரோட்டில் 24 பேருக்கும், சென்னையில் 25 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருந்தது.
ஆனால் அடுத்தடுத்த 70 பேர் வரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தாய்லாந்து நபர்கள் 3 பேர், அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள், புதுதில்லி சென்று திரும்பியவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்று இந்த பட்டியல் இருந்தது.
இதனிடையே கொரோனா வைரஸ் பரவும் வேகத்தை கட்டுப்படுத்தவும், தடுக்கவும் ஈரோடு மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்தது.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தலைமையில் அனைத்துத்துறை அதிகாரிகளும் ஒன்றிணைந்து மாபெரும் கொரோனா தடுப்பு இயக்கத்தை முன்னெடுத்துச்சென்றனர். சுகாதாரப் பணிகள், தூய்மைப்பணிகள், தனிமைப்படுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.
தமிழக அரசு ஈரோடு மாவட்டத்தை தனிமைப்படுத்தி அறிவித்த பிறகு, மாவட்டத்துக்குள் சுல்தான்பேட்டை, கொல்லம்பாளையம் வீட்டு வசதிவாரியம் பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டது. இதுபொதுமக்களுக்கு சற்று வியப்பை அளித்தது. ஆனால் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் இந்த நடவடிக்கையில் மிகத்தீவிரமாக இருந்தது.
புதுதில்லி தப்லிக் மாநாட்டுக்கு சென்று வந்தவர்கள் மூலம் கொரோனா பரவும் வாய்ப்பு உள்ளது என்ற தகவல் வந்த உடனேயே ஈரோடு மாவட்டத்தில் இருந்து புதுதில்லிக்கு சென்று வந்த அனைவரையும் வீடு வீடாகச் சென்று போலீஸார் அழைத்து வந்து, சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தது சமூகப் பரவலை கட்டுப்படுத்த மிகப்பெரிய உதவியாக இருந்தது.
அதற்கு பின்னர் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் ஏற்கனவே சந்தேகத்தின் அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்கள் என்பதால், அவர்கள் சார்ந்த பகுதியையும் தனிமைப்படுத்துவது எளிதானது. ஈரோடு மாவட்டத்தில் 18 இடங்களில் 32,435 குடும்பங்களை சேர்ந்த 1.20 லட்சம் பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். சுமார் 1,000 பேர் தீவிர கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் இருந்து கொரோனா பரிசோதனை செய்த மொத்த நபர்கள் 1,258. இதில் 70 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 4 பேர் கோவையிலும், ஒருவர் திருச்சியிலும் சிகிச்சை பெற்றவர்கள். ஈரோடு மாவட்டத்தில் இருந்து நேரடியாக கண்டறியப்பட்டவர்கள் 65 பேராக இருந்தது.
பொதுஇடங்களில் மக்கள் கூடாமல் இருக்க சந்தைகள் மாற்றம் செய்தது. சாலைகள் அடைக்கப்பட்டது. வீதிகளுக்கே காய்கறிகள் வர ஏற்பாடு செய்தது என்று பல விஷயங்கள் தினசரி நடவடிக்கையாக அறிவிக்கப்பட்டன. ஈரோடு மாநகரத்தின் அனைத்து முக்கிய சாலைகளிலும் கிருமி நாசினி தெளித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஈரோடு அரசு மருத்துவமனையில் இருந்து சிறப்பு பணிக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரிக்கு சென்று அரசு மருத்துவர்கள் தீவிர பணியாற்றினர். இதனால் ஈரோட்டில் குறிப்பிட்ட நாட்களில் கொரோனாவில் இருந்து பலரும் குணம் அடைந்தனர். இதனிடையே ஈரோடு மாவட்டத்தில் கடைசியாக கடந்த 15ஆம் தேதி 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
அதன்பிறகு கடந்த 13 நாட்களாக புதிதாக யாருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. ஏற்கனவே கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் தொடர்பில் இருந்து தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ளவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை புதிதாக யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படாததால் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதனிடையே 14 நாட்கள் வரை புதிதாக கொரோனா தொற்று இல்லாவிட்டால் தற்போது சிவப்பு மண்டலத்தில் உள்ள ஈரோடு மாவட்டம் ஆரஞ்சு மண்டலத்திற்கு மாறும் வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் ஊரடங்கில் தற்போதுள்ள கடுமையான கட்டுப்பாடுகளில் இருந்து ஒரு சிலவற்றுக்கு விலக்கு அளிக்கப்படலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.