பூந்தமல்லியில் நடைபெற்ற இந்தியன்-2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக லைகா நிறுவனம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரபல இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் படம் ‘இந்தியன்-2’. இந்த படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி அருகேயுள்ள இ.வி.பி. பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. நேற்று இரவு எதிர்பாராதவிதமாக மிக உயரமான ராட்சத கிரேனில் மின்விளக்குகளை பொருத்தி காட்சிகள் படமாக்கப்பட்ட போது கிரேன் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் ஷங்கரின் உதவி இயக்குனர் கிருஷ்ணா, கலை உதவி இயக்குனர் சந்திரன், உதவியாளர் மது ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 9 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
நடிகர் கமல்ஹாசன் தரப்பில் இருந்து இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடி நிதியுதவியும், லைகா நிறுவனம் சார்பில் ரூ.50 லட்சம் நிதியுதவியும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து காரணமாக லைகா நிறுவனம் மீது 4 பிரிவுகளின் கீழ் நசரத்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் கிரேன் உரிமையாளர், புரொடக்ஷன் மேனேஜர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இணை இயக்குனர் குமார் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.